தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ?
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பானது 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி அந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி தற்போழுது எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது, ஆனால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று மகாராஷ்டிராவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளும் ஜனவரி 24-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் ஆந்திராவில் பள்ளிகள் மூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கவிருந்த நிலையில், திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
உலக சுகாதார துறை உறுப்பினர்கள் மற்றும் உலக வங்கி உறுப்பினர்கள் ஒரு சிலர் இந்த கொரோனா காலத்தில் பள்ளிகளை மூட அவசியமில்லை என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேஷன் சங்க பொதுச்செயலாளர் திரு. நந்தகுமார் அவர்கள் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மாணவர்களுக்கு பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பான இடம் என்று தெரிவித்தார். எனவே தமிழக அரசு கூடிய விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகளில் ஆன்லைனில் நடத்திக்கொள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது, இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 Comments