தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் ! - தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் தியேட்டர்கள் மற்றும் மால்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன, இவைகள் மூலம் கொரோனா பரவாதா என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேஷன் சங்க பொதுச்செயலாளர் திரு. நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் சங்க பொதுச் செயலாளர் திரு நந்தகுமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் .
"தமிழகத்தில் தியேட்டர் மற்றும் மால்கள் செயல்பாடும் போது பள்ளிகளை மட்டும் ஏன் மூட வேண்டும். தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பான இடம்"
மேலும் அனைத்து பள்ளிகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகின்றன, மாணவர்களுக்கு தினசரி வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது மேலும் அவர்களுக்கு சனிடைசர்களும் வழங்கப்படுகின்றன, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்படுகின்றனர். பள்ளிகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை என்று உலக வங்கி உறுப்பினர் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஆனது ஜனவரி 31ஆம் தேதி நிறைவடைகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜனவரி மாத இறுதியில் முதலமைச்சர் மருத்துவ துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யும் போது பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் மகாராஷ்டிராவில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 24-ஆம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் நேற்றைய கொரோனா பாதிப்பு 46,197ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு மேல் பதிவாகும் மகாராஷ்டிராவிலேயே 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை (நேற்று தமிழகத்தில் கொரோனாவால் 39பேர் உயிரிழந்துள்ளனர்.) குறைவாக உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments